May 16, 2025 - 01:33 PM -
0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டிய, சமர்செட், நானுஓயா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் கீழ் இயங்கும் தம்பகஷ்த்தலாவ, கிளாரண்டன் கீழ் பிரிவு, சமர்செட் லேங்டெல், கிரிமிட்டி கீழ் பிரிவு போன்ற தோட்டங்களில் எரிபொருள் கசிவு கலப்பால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடந்த 14 ஆம் திகதி இரவு முதல் இன்று (16) வரை பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று புதன்கிழமை (14) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிகமான எரிபொருள் கசிவும் ஏற்பட்டு அருகில் இருந்த நீரோடையில் கலந்தது.
இதன் காரணமாக தம்பகஷ்த்தலாவ, கிளாரண்டன் கீழ் பிரிவு, சமர்செட் லேங்டெல், கிரிமிட்டி கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் நீர்தொட்டியில் சேமித்து வைக்கப்படும் நீரின் அதிக அளவு எரிபொருள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் குறித்து நீர்தொட்டியில் இருந்து வெளியேறும் நீரினை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்தொட்டியில் இருந்து நீர் வெளியேறும் குடிநீர் குழாய்கள் முழுவதும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கு தற்போது தேவைக்கேற்ப தோட்ட நிர்வாகத்தினர் மூலமாக வெளிப்பிரதேசங்களில் இருந்து சுத்தமான குடிநீர் பெளசர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் நீர் போதுமானதாக இல்லை எனவும் குடிப்பதற்கும் மாத்திரம் பயன்படுத்த முடிகிறது எனவும் தங்களின் வேறு தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாது உள்ளதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
விபத்து நடந்த நாளில் இரவு நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் அதிக அளவு எரிபொருள் கசிந்து சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் குறித்த பகுதிகளில் உள்ள நீரில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதா என நீர் மாதிரிகள் சேகரித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் விபத்து ஏற்பட்ட இடத்தில் அதிக எரிபொருள் கசிவு ஏற்பட்டு வீதி வலுக்கும் தன்மை உள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொள்கிறனர்.
--