கிழக்கு
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து மட்டு. வைத்தியசாலை சாதனை

May 21, 2025 - 06:49 PM -

0

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து  மட்டு. வைத்தியசாலை சாதனை

கிழக்கு மாகாணத்தின் வைத்தியதுறையின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (21) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் மற்றும் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் வைத்தியர் மதனழகன், சிறுநீரக சிகிச்சைப்பிரிவின் தலைவர் வைத்தியர் முஜாஹீத் உட்பட இந்த சிகிச்சையில் பங்குகொண்ட வைத்திய நிபுணர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர். 

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறுபட்ட சத்திர சிகிச்சைகள்நடைபெற்று வருகின்றது. சிறிய, பெரியளவிலான சத்திரசிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வருடத்திற்கு 10ஆயிரத்திற்கும் அதிகமான பெரியளவிலான சத்திர சிகிச்சைகளும் 12500இற்கும் அதிகமான சிறிய சத்திரசிகிச்சைகளும் நடைபெற்றுவருகின்றன. 

அந்த வகையில் இந்த மாதம் 15ஆம் திகதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று உரிய முறையில் இந்த மாற்று சிகிச்சை நடைபெற்று இன்று மாற்று சிகிச்சை பெற்றவர் வீடு செல்கின்றார். 

இந்த சிறுநீரக மாற்று சிகிச்சையினை ஒரு குழுவாக செய்து முடித்துள்ளனர். வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் கொழும்பு, அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோரின் அனுசரணையுடன் இந்த மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 

இது கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு மைல்கல்லாக இந்த அறுவை சிகிச்சை காணப்படுகின்றது. இதுபோன்ற சிகிச்சைகளை தொடர்ந்து செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என்றார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05