May 22, 2025 - 03:08 PM -
0
அமானா வங்கியின் பணிப்பாளர் சபைக்கு செந்தில்வேல் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் பிரிதிநிதித்துவத்தின் உள்ளடகத்துடன், வங்கியின் பணிப்பாளர் சபை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் இரண்டாவது மாபெரும் பங்குதாரராக செந்தில்வேல் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற முதலீட்டாளரும் மருத்துவ செயற்பாட்டாளருமான கலாநிதி. ரி. செந்தில்வேல் அவர்களால் நிறுவப்பட்ட செந்தில்வேல் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அதிகளவு ஈடுபாட்டைக் கொண்ட முதலீட்டு நிறுவனமாக அமைந்துள்ளது. வலு, நிதி, உணவு மற்றும் பானங்கள், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சேவைகள், விற்பனை மற்றும் பெருந்தோட்டங்கள் போன்ற பரந்த பிரிவுகளில் தனது முதலீடுகளைக் கொண்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் அமானா வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்திருந்ததை தொடர்ந்து, வங்கியின் மீது கொண்டிருக்கும் பங்கு உரிமையாண்மையை 19.9% ஆக செந்தில்வேல் ஹோல்டிங்ஸ் அதிகரித்துள்ளது.
செந்தில்வேல் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட்டை பிரதிநிதித்துவப்படுத்தி, அமானா வங்கியின் பணிப்பாளர் சபையின் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளராக செந்தில்வேல் செந்தி நந்தனன் இணைந்துள்ளார். கூட்டாண்மைத் துறையில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், செந்தில்வேல் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட்டின் நிறைவேற்று பணிப்பாளராகவும் செயலாற்றுகிறார். விற்பனைகள், சந்தைப்படுத்தல், கொள்முதல், சரக்கு கையாளல் மற்றும் பங்கு வியாபாரம் போன்ற பல பிரிவுகளில் அவரின் நிபுணத்துவம் பரந்துள்ளதுடன், பரந்தளவு வியாபார செயற்பாடுகளில் தமது தலைமைத்துவத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Southern Queensland பல்கலைக்கழகத்திடமிருந்து MBA பட்டத்தை இவர் பெற்றுள்ளதுடன், வியாபார நிறைவேற்று அதிகாரிகள் சம்மேளனத்தின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கிறார்.
இந்த நியமனம் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது பணிப்பாளர் சபையில் செந்தில்வேல் ஹோல்டிங்ஸ் பிரதிநிதித்துவத்தை உள்வாங்கி அதனை வலுப்படுத்தியுள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். குறிப்பாக, எமது வங்கியின் மீது கலாநிதி. ரி. செந்தில்வேல் அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். செந்தில்வேல் செந்தி நந்தனன் அவர்களை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன், அவரின் பரந்த அனுபவத்தினூடாக, வழிகாட்டல்களினூடாக, எமது மூலோபாய பயணத்துக்கு பெறுமதி சேர்க்கப்படும் என நம்புகிறோம். எமது பிரதான பங்குதாரர்களில் ஒருவராக இவர் திகழும் நிலையில், வங்கியின் வளர்ச்சியை மேம்படுத்துவது, வாடிக்கையாளர் பெறுமதியை மேம்படுத்துவதில் அவரின் பங்களிப்பு மற்றும் வழிகாட்டல்களை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
இந்த நியமனத்துடன், அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் அடங்கியிருப்போர் விபரம் வருமாறு: அஸ்கி அக்பராலி (தவிசாளர்), மொஹமட் அஸ்மீர் (முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி), கைருல் முசாமெல் பெரேரா பின் அப்துல்லா (நிறைவேற்று அதிகாரமற்ற சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளர்), தில்ஷான் ஹெட்டியாரச்சி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்ரி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), சயித் முஹம்மட் அசிம் ராஸா (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), திஷான் சுபசிங்க (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்), மொஹமட் ஹசன் (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), மொஹமட் ஆடமலி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), டெல்வின் பெரேரா (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்), அஸ்ரின் சஹீர் (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்) மற்றும் செந்தில்வேல் செந்தி நந்தனன் (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்).
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 25 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.