May 23, 2025 - 11:00 AM -
0
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் நேற்று (22) பிற்பகல் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா ? என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மொத்தமாக 40 வாகனங்கள் பரிசோதனை செய்ததில் 22 வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை போக்குவரத்து சபையில் சேவையில் ஈடுபடும் 10 பேருந்துகளும், 8 தனியார் பேருந்துக்களும் 4 லொறிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் வாகன பரிசோதகர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்களையும், தனியார் பேருந்துகளையும், பொருத்தமற்ற நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பல தனியார் வாகனங்களையும் தற்காலிகமாக சேவையிலிருந்து நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
மேலும் அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டது.
பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றப்படும் வரை வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த வருவாய் உரிமங்கள் நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றி மீண்டும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் காட்டப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நுவரெலியா - கண்டி பிரதான வீதி மற்றும் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியிலும் முதல் கட்டமாக பல இடங்களில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் இனிவரும் நாட்களில் வீதிகளில் செல்லும் வாகனங்களின் சோதனையிடும் நடவடிக்கையை பாரியளவில் விரிவுபடுத்தப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்டத்தின் தலைமை மோட்டார் போக்குவரத்து வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார் .
--