உலகம்
விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு 8,527 கோடி ரூபா கடன்

May 24, 2025 - 04:33 PM -

0

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு 8,527 கோடி ரூபா கடன்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு 8,527 கோடி ரூபா (இந்திய பெறுமதி) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்தது. 

பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் வழங்கப்படும் நிதி குறித்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் IMF மீளாய்வு செய்தது. 

அதனடிப்படையில் 20,000 ரூபா கோடிக்கு மேல் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க முடிவுசெய்யப்பட்டதாகவும் முதற்கட்டமாக 8,527 கோடி ரூபா விடுவிக்கப்பட்டதாகவும் IMF தொலைத்தொடா்பு துறையின் பணிப்பாளர் ஜூலி கொஸாக் தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘IMF திட்டங்கள் தவிா்த்து வேறு காரணங்களுக்காக இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தினால் வருங்காலத்தில் அந்நாட்டுக்கு கடன் வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். 

ஏற்கனவே பெற்ற கடன்கள் மற்றும் IMF விதிகளை சம்பந்தப்பட்ட நாடுகள் பின்பற்றுகிறதா என்ற ஆய்வின் அடிப்படையிலேயே உறுப்பு நாடுகளுக்கு IMF கடன் வழங்கி வருகிறது. அந்தவகையில், IMF விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்துள்ளதால் அந்நாட்டுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 

விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் தற்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்தொகையானது அந்நாட்டு மத்திய வங்கிக்கு அனுப்பப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் பட்ஜெட்டுக்கு இந்த நிதியை அந்நாட்டு வங்கி விடுவிக்க முடியாது. 

இதுபோன்ற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே IMF கடன் வழங்கும்’ என்றாா். 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா மே 7ஆம் திகதி அதிதுல்லியத் தாக்குதல் நடத்தி அழித்தது. இதைத் தொடா்ந்து, நீடித்து வந்த மோதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் 10ஆம் திகதி அறிவித்தன. 

இதனிடையே, தங்கள் நாட்டின் பொருளாதார நிலையைக் காரணம் காட்டி IMF இடம் பாகிஸ்தான் கடன் கோரியது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு 20,000 கோடி ரூபா வரை தவணைகளாக கடன் வழங்க IMF அனுமதி அளித்தது. 

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடனை அந்நாடு பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடும் எனக்கூறி இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. 

இருப்பினும், இந்தியாவின் எதிா்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் தொகையை விடுவிக்க IMF அனுமதி அளித்தது. அதன்பிறகு இந்தக் கடனை பெற பாகிஸ்தானுக்கு 11 நிபந்தனைகளை IMF விதித்தது.

Comments
0

MOST READ