Jun 16, 2025 - 12:30 PM -
0
நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் திரையில் ஜோடியாக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி டோலிவுட்டில் பரவி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'யே மாய சேசாவே' படத்தின் மறுவெளியீடுதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். ஜூலை 18 அன்று இந்தக் காதல் கிளாசிக் படம் மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
நாக சைதன்யாவும் சமந்தா ரூத் பிரபுவும் இணைந்து நடித்த இந்தப் படம், தமிழில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், கார்த்திக் - ஜெஸ்ஸி கதாபாத்திரங்களின் காதலும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்த மறுவெளியீட்டு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யாவும் சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. 2021 இல் பிரிந்த இருவரும் இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக ஒன்றாகத் தோன்றுவார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமூக ஊடகங்களில் 'யே மாய சேசாவே' மறுவெளியீடு குறித்த விவாதங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. "எனக்குப் பிடித்த காதல் கதை மீண்டும் திரையில் ஜூலை 18 ஆம் திகதி காத்திருக்கிறேன்!" என்று ஒரு ரசிகர் எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
4K தொழில்நுட்பத்தில் படம் மறுவெளியீடு செய்யப்படுவதால், ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவும் சைதன்யாவும் விளம்பர நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொண்டால் அது அற்புதமாக இருக்கும் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இருவரும் விளம்பரங்களில் இணைவார்களா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 'யே மாய சேசாவே' படப்பிடிப்பின்போதுதான் நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலிக்கத் தொடங்கினர்.
பல வருட காதலுக்குப் பிறகு 2017 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. இந்த ஜோடி சுமார் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை நடத்தினர். பின்னர் 2021ம் ஆண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை ஷோபிதாவை காதலிக்க தொடங்கினார் நாக சைதன்யா. இரண்டு ஆண்டுகள் இருவரும் டேட்டிங் செய்துவந்த நிலையில், கடந்த ஆண்டு மணந்தார்.