Jun 17, 2025 - 04:59 PM -
0
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும் பதவிகளுக்கான தலைவர்கள் தெரிவும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இன்று (17) மதியம் 02 மணி அளவில் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி. சத்தியமூர்த்தி ரதிதேவி, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தவிசாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக திருமதி. ரதிதேவி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தேவராஜ் சந்திரகுமார் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 8 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் எட்டு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் சார்பாக போட்டியிட்ட திருமதி. சத்தியமூர்த்தி ரதிதேவி தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தேவராஜ் சந்திரகுமார் 05 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி சார்பாக தெரிவான உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.
இதே இந்த சபைக்கு உப தவிசாளர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி சார்பாக அல்லிமுத்து பிரதீப் தினேஷன் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தவிசாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபை 15 உறுப்பினர்களை கொண்டது.
• தேசிய மக்கள் சக்தி - 04
• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 04
• ஐக்கிய மக்கள் சக்தி – 04
• ஜனநாயக தேசிய கூட்டமைப்பு - 01
• ஈரோஸ் ஜனநாயக முன்னணி – 01
• ஐக்கிய தேசிய கட்சி - 01
--