Jul 5, 2025 - 01:10 PM -
0
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா (வயது 26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி திருமணம் நடந்தது. தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்தனர். அந்த வீட்டில் ஜெமலாவும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர்.
நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை இல்லாமல் இருந்தார். மேலும் வெளிநாடு செல்வதாக கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெமலாவின் பெற்றோருக்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே ஜெமலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் வைத்தியசாலைக்கு விரைந்து சென்றனர். அங்கு ஜெமலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் பொலிஸார் விரைந்து வந்து சடலத்தை பொறுப்பேற்று பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் 'மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக' கூறியுள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஜெமலாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இதனால் புதுப்பெண்ணின் உடல் ஆசாரிபள்ளம் அரச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 28ஆம் திகதி திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.