Jul 15, 2025 - 03:40 PM -
0
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமலாக உள்ளது.
இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஆன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் அமலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கூறிய பதில்தான் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அந்த ஊழியர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து பொலிஸார் அதிகாரி ராம்லீலா ரவாணி தெரிவிக்கையில்,
மதுபாட்டில்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபாட்டில்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார். காலியான அந்த மதுபாட்டில்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார்.
மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இவையெல்லாம் அரசின் ஊழலை மறைக்கவே அரசு நடத்தும் நாடகம் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதுல் ஷாத்தியோ குற்றம் சாட்டியுள்ளார். சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, முக்கிய குற்றவாளிகளையும் எலிகளையும் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜார்க்கண்டில் எலிகள் போதைப் பொருள் திருடியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் 10 கிலோ பாங்கு மற்றும் 9 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக புகார் வந்துள்ளது.
இந்நிலையில் எலி மதுகுடித்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்ற போது எலிகள் மதுபானத்தை குடித்தன என்ற அபத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.