கிழக்கு
கொள்ளை சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் உயிரிழப்பு

Jul 30, 2025 - 04:37 PM -

0

கொள்ளை சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப பெண், சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மட்டக்களப்பு நகர், நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

கடந்த 24 ஆம் திகதி காலை 6.30 மணியளவில், குறித்த வயோதிப பெண் தனது வீட்டின் முன்புள்ள வீதியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பியோடினர்.

 

இதனையடுத்து, வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

 

இச்சம்பவத்தை அடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

 

இதேவேளை, குறித்த கொள்ளையர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05