Jul 30, 2025 - 05:26 PM -
0
புலம்பெயர்ந்து சென்றாலும் எமது பாரம்பரிய கலைகளை அழியவிடாது கற்பித்து அடுத்த சந்ததிக்கு கடத்தும் உங்கள் முயற்சிகளை நான் பாராட்டி வாழ்த்துகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய 'சிவமயம் 2025' நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் ஒழுங்குபடுத்தலில் நேற்று (29) மாலை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
அதன் நிறுவுனர் திருமதி ஸ்ரீமதி ராதிகா ராலோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தனும் கலந்துகொண்டனர்.
பிரிட்டனில் பிறந்து வளர்ந்த கலைக்கூட மாணவர்களின் இசை மற்றும் நடன நிகழ்வுகளைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரை நடைபெற்றது.
ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டமையை வெகுவாகப் பாராட்டினார். மேலும், ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முழுவதும் இறைபக்திப் பாடல்களை இசைத்தும், அத்தகைய பாடல்களுக்கு நடனங்களும் அரங்கேற்றப்பட்டமையை வாழ்த்திய ஆளுநர், தற்போது எமது ஊர்களில் ஆலயத் திருவிழாக்களில் குத்துப்பாடல்களே அதிகம் இசைக்கப்படுகின்றமை தொடர்பில் வேதனை வெளியிட்டார்.
--