Oct 31, 2025 - 08:07 AM -
0
பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் இளைய சகோதரரான இளவரசர் எண்ட்ரூ, யோர்க் டியூக் பதவியைத் துறந்ததையடுத்து, அவரது 'இளவரசர்' பட்டத்தை நீக்க பக்கிங்ஹாம் அரண்மனை நடவடிக்கை எடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட சார்லஸ் மன்னர், இனிமேல் இளவரசர் எண்ட்ரூ, எண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்றே அழைக்கப்படுவார் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 'இளவரசர்' பட்டத்தை இழந்த எண்ட்ரூ, 2004 ஆம் ஆண்டு முதல் அவர் வாழ்ந்து வந்த வின்ட்சர் அரண்மனையை விட்டு வெளியேற நேரிடும்.
குழந்தைகள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரும், இப்போது உயிருடன் இல்லாதவருமான அமெரிக்கரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் உடன் தொடர்பு வைத்திருந்ததாக எண்ட்ரூ மீது பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதன் காரணமாகவே, அவர் இந்த மாதம் இளவரசர் யோர்க் டியூக் பதவியைத் துறக்க நடவடிக்கை எடுத்தார்.
தமது முடிவைத் தெரிவிக்கும்போது அவர், தமது மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தமது சகோதரரான சார்லஸ் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் நடவடிக்கைகளையும் பாதிப்பதாகக் கூறினார்.
அத்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் இளவரசர் எண்ட்ரூவின் நெருங்கிய வணிகப் பங்குதாரர் ஒருவர் சீன ஒற்றர் என்று அம்பலமானமையும் அவர் தமது பதவியைத் துறந்ததற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது.

