Nov 2, 2025 - 10:35 AM -
0
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி தலவாக்கலை நகரில் நேற்று (01) இரவு போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் பலர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.
கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றில் இருந்த எஸ்.புஸ்பகுமார் (28) என்ற இளைஞனும் இருந்துள்ளார்.
இதன்போது பிரதான பாதையில் வருகை தந்த ஜீப் வண்டி ஒன்று திடீரென இளைஞர்கள் மீது மோதியுள்ளது.
இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் நுவரெலியாவில் இருந்து நேற்று தலவாக்கலை பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
சடலம் தலவாக்கலை நகரை வந்தடைந்த பின்பு, போராட்டம் இடம்பெற்றது. குடும்ப உறவினர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் வீதிமறியலில் ஈடுபட்டனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதிக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்தது.
சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்ததையடுத்து நிலைமை சீரானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--

