Nov 6, 2025 - 08:41 AM -
0
ஒரு முஸ்லிம் ஆண் தனது இரண்டாவது திருமணத்தைக் கேரள திருமணப் பதிவு (பொது) விதிகள், 2008 இன் கீழ் பதிவு செய்ய விரும்பினால், அவரது முதல் மனைவியின் சம்மதத்தைக் கேட்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவி எதிர்ப்புத் தெரிவித்தால், அத்திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் சம உரிமை உள்ளது என்றும், அடிப்படை உரிமைகள் மத உரிமைகளை விட முக்கியமானவை என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இரண்டாவது திருமணத்தை எதிர்க்கும் பெண்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.
இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் சம்மதம் தேவையில்லை என்று திருக்குர்ஆனோ அல்லது இஸ்லாமிய சட்டங்களோ அனுமதிக்கவில்லை எனவும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைச் சமமாக நடத்த முடிந்தால் மட்டுமே ஒருவர் திருமணம் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆண், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்தார். அவரது திருமணத்தைப் பதிவு செய்யப் பஞ்சாயத்து மறுத்ததால், அவர் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். அப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

