Nov 6, 2025 - 03:51 PM -
0
வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்தி மாகாண சபை ஆட்சியை நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசாங்கம் ஆளுநர் ஆட்சியை நடாத்துவதனை நிறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறது.
இதனடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. எல்லை நிர்ணய வேலைகளை விரைவில் மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.
தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சில நிபந்தனைகளை கூறியுள்ளார். அவை என்ன நிபந்தனைகள் என இதுவரை தெரியாது பேச்சுவார்த்தை ஊடாக இணைய முடியும். பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லை.
அத்துடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளை கோரியிருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம். கடந்த அரசாங்கள் அனைத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தது. இந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்காத நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் அரசாங்கம் முதலில் பாதாள உலக குழுக்களை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.
--

