செய்திகள்
நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

Dec 18, 2025 - 03:11 PM -

0

நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

எதிர்காலத்தில் நாட்டினுள் எரிவாயுத் தட்டுப்பாடு எவ்வகையிலும் ஏற்படாது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

இன்று (18) நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். எதிர்க்கட்சியினர் சமூகத்தின் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எரிவாயு இறக்குமதி செய்வதற்காகக் கேள்வி மனு நடைமுறை ஊடாகப் புதிய நிறுவனமொன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்நிறுவனத்தின் முதலாவது எரிவாயுக் கப்பல் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். 

புதிய நிறுவனத்திற்கு எரிவாயு டெண்டர் வழங்கப்பட்டதன் காரணமாக, மார்ச் மாதமாகும் போது நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத் பின்வருமாறு தெரிவித்தார்: 

"கடந்த நாட்களில் ஓமான் நிறுவனமே எரிவாயுவை விநியோகித்தது. ஓமான் நிறுவனத்தை விட 15 டொலர் சதங்கள் குறைவாகக் கோரி புதிய நிறுவனமொன்று டெண்டருக்கு விண்ணப்பித்தது. அதற்கமைய டெண்டர் சபையானது அந்தப் புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியது. அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தரத்தைப் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 5ஆம் திகதியாகும் போது முதலாவது கப்பல் இலங்கைக்கு வரும். எவ்வகையிலும் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது. பொய்யாகப் பயமுறுத்த வேண்டாம். ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம். அந்த உறுதிப்பாடு எம்மிடம் உள்ளது."

Comments
0

MOST READ
01
02
03
04
05