Dec 23, 2025 - 04:48 PM -
0
கொமர்ஷல் வங்கியானது ஒன்றிணைவோம் மீளுருவாக்குவோம் என்ற கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தொடர் நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மிக முக்கியமான நேரங்களில் இலங்கையுடன் இணைந்து நிற்பதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் பணிகளுக்காக சுமார் ரூ. 125 மில்லியன் ரூபா மொத்த நிதியினை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை நேற்று (டிசம்பர் 22) அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து மீளக்கட்டியெழுப்புதல் நிதியத்திற்கு (Rebuild Sri Lanka Fund) ரூ. 110 மில்லியன் நன்கொடையை வழங்கவுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிதியானது, வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. எஸ். பிரபாகர், மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் திருமதி அஷானி சேனாரத்ன ஆகியோர் அடங்கிய வங்கியின் பிரதிநிதி குழுவினரால், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக அவர்களிடம் வழங்கப்பட்டது.
இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான கொமர்ஷல் வங்கி, உடனடி நிவாரண தேவைகளையும் நீண்டகால மீட்புத் தேவைகளையும் பூர்த்தி செய்வதுடன், நாட்டின் பேரிடர் தயார்நிலை மற்றும் இடர் முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. உடனடி நடவடிக்கையாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்க இலங்கை விமானப்படையின் மூலம் உலர் உணவுப் பொருட்களை வங்கி நன்கொடையாக வழங்கியது.
வர்த்தக செயற்பாடுகளின் மீட்புக்கு ஆதரவாகவும், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கடனுதவி பெற்றவர்களுக்காக மத்திய வங்கி அறிவித்த நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வர்த்தகங்கள் நிலைநிறுத்தப்பட்டு மீண்டும் செயல்படுவதற்காக தேவையான நிதி உதவிகளை கொமர்ஷல் வங்கி வழங்கியது.மேலும், தேசிய பேரிடர் முகாமைத்துவத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், இடஞ்சார்ந்த தரவு இணையதளத்தில் இடர் தகவலை மேம்படுத்துவதற்காக பேரிடர் முகாமைத்துவ நிலையத்திற்கு அனுசரணையளித்து அதன் மறுசீரமைப்பிற்கு வங்கி ஆதரவளித்துள்ளது.
இது ஒன்றிணைந்து மீளக்கட்டியெழுப்புதல் நிதியத்திற்கு ரூ. 110 மில்லியன் பெறுமதியான கொமர்ஷல் வங்கியின் காசோலை வழங்கப்பட்ட தருணமாகும்.

