Dec 25, 2025 - 10:25 AM -
0
இயேசு எங்களுடன் இருக்கிறார். இந்த துன்பகரமான சூழலிலும் நாங்கள் நம்பிக்கையை இழக்க கூடாது. நம் நடுவிலே நமக்காக பாடுபட்ட, நமக்காக பல துன்பங்களை அனுபவித்த, உயிர்த்த இயேசு ஆண்டவர் எங்களோடு இருக்கிறார் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில்,எதிர்பாராத இயற்கை பேரழிவின் மத்தியில் உங்களுடைய துன்பத்துடன் இணைந்து எங்கள் இதயங்களும் துடிக்கிறது.
இந்த நிலையை நாங்கள் கிறிஸ்து இயேசுவின் பிறப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிறிஸ்து துன்பகரமான சூழலிலே அவரும் பிறந்தார். இந்த உலகிலே நாங்கள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள்,கவலைகள், எல்லாவற்றையும் இயேசு ஆண்டவர் அனுபவித்தவராகவே இருக்கிறார்.
ஆகவே இயேசு எங்களுடன் இருக்கிறார்.இம்மானுவேல் நாங்கள் யேசுவோடு இருக்கிறோம். இந்த துன்பகரமான சூழலிலும் நாங்கள் நம்பிக்கையை இழக்க கூடாது. நம் நடுவிலே நமக்காக பாடுபட்ட, நமக்காக பல துன்பங்களை அனுபவித்த, உயிர்த்த இயேசு ஆண்டவரும் எங்களோடு இருக்கிறார். இயேசு பிறப்பின் வருகையை தான் நாங்கள் கொண்டாடுகிறோம்.
இயேசு எங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். நாங்கள் தனியாக இல்லை. இம்மானுவேல் நான் உங்களுடன் இருக்கிறேன். அதாவது கடவுள் நம்மோடு இருக்கின்றார். இந்த விசுவாசத்தோடும், அன்போடும், ஒற்றுமையோடும், ஒரே மனற்பான்மையோடும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கின்ற நல் கலாச்சாரத்தையும் ஒருவர் ஒருவரை தாங்கிக்கொள்கின்ற நல்ல கலாச்சாரத்தையும் நாங்கள் இந்த நாற்களிலே கற்றுக் கொள்ளுவோம்.
இந்த நாட்களில் நாங்கள் ஆடம்பரங்களை தவிர்த்துக் கொண்டு, இயேசுவின் உடன் இருப்பை நாங்கள் உணர்ந்து கொண்டு, எங்களுடைய உடன் சகோதர்களுடன் ஒன்றித்திருக்கும் இந்த வேளையிலே இயேசு உங்கள் ஒவ்வொருவருக்கும் அமைதியையும், அருளையும் அருள்வாராக,
நமக்கு எல்லாம் புதுப்பிக்கப்பட்ட ஒரு வாழ்வை இந்த நத்தார் பெருவிழா கொண்டு வருவதாக நாங்கள் எல்லாவற்றிற்கு மேலாகவும் ஆண்டவருடைய இருப்பை உணர்ந்து கொண்டு நாங்கள் ஒருவர் ஒருவரோடு ஒற்றுமையாக சமாதானத்துடன் வாழவும், இயேசுவின் பிறப்பு ஊடாக வழி நடத்திச் செல்வார். உங்கள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
--

