Dec 25, 2025 - 11:45 AM -
0
மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு (25) ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும்,புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.
இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

