Dec 29, 2025 - 10:51 AM -
0
நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கெகிராவ - தலாவ வீதியின் கிரலோகம பகுதியில், தலாவையிலிருந்து எப்பாவல நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த சாரதி, ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்து தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, குறித்த ஆண் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தங்காலை வீதியின் கடற்கரை வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.
மாத்தறையிலிருந்து கடற்கரை வீதி ஊடாக கந்தர நோக்கி பயணித்த வேன் ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாத்தறை, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
மாத்தறை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

