Dec 30, 2025 - 01:42 PM -
0
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்று (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்று (29) காலை மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த கும்பல் குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட தோடு, அவரை தகாத வார்த்தைகளால் பேசி, அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் ஒரு பெண் கிராம அலுவலர் என்பதால் அவரது கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். குறித்த சம்பவத்திற்கு கிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டித்ததோடு, இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்னாள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப்படாதவர்களும் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு தொடர்ந்து பல்வேறு விதங்களில் தம்மை அச்சுறுத்தி வருவதாகவும், தாங்கள் அரச சுற்று நிருபங்களுக்கு அமையவே தமது கடமைகளை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவுதம் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்தனர்.
எனவே குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும்,கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி படுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இன்று முதல் தொடர் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக சிறிலங்கா ஐக்கிய கிராம அலுவலகர் சங்கத்தின் மன்னார் நகர பிரதேச கிளையின் தலைவர் கமலேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
--

