Dec 30, 2025 - 03:47 PM -
0
தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன.
இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
முறையான தங்குமிட வசதிகள் இல்லாமையால் இப்பாடசாலைகளில் குறிப்பாக இரண்டாம் நிலை வகுப்புகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப்பகுதி மாணவர்களின் தேர்ச்சி மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.
இவ்விளைவினால் தோட்டப்புற இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

