Dec 30, 2025 - 04:05 PM -
0
அம்பாறை, பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஷ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் நேற்று (29) மாலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
முதலை கடித்த நிலையில் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் பெரியநீலாவணை கிராமசேவகருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனை அடுத்து அங்கு சென்ற பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். மேலும் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 55 வயது முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை பெரியநீலாவணை பொலிஸாருடன் இணைந்து அம்பாரை தடயவியல் பிரிவு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டுவந்தனர்.
அத்துடன் இச்சடலத்தின் வலது கால் பகுதி இல்லாத நிலையிலும் முகத்தின் ஒரு பகுதி சிதைவடைந்தும் காணப்பட்டது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே மேற்படி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0718592954 அல்லது 0778911214 என்ற இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
--

