Jan 20, 2026 - 09:11 AM -
0
ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வு காலை 11.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது.

