செய்திகள்
கொரிய வேலை தேடுபவர்களுக்கு விசேட அறிவிப்பு

Jan 20, 2026 - 05:11 PM -

0

கொரிய வேலை தேடுபவர்களுக்கு விசேட அறிவிப்பு

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெறுவதற்காகத் தகுதி பெற்று, வேலை ஒப்பந்தத்தை எதிர்பார்த்து இணையத்தளத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இரண்டாம் ஆண்டிற்கான பதிவின் போது இதுவரை கட்டாயமாக்கப்பட்டிருந்த இரண்டாவது மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வது இனி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வழங்கியுள்ளது. 

 

இந்த புதிய தீர்மானம் 2026 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, மொழித் தேர்ச்சிப் பரீட்சை உள்ளிட்ட ஏனைய அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்யும் பணியாளர்கள் இணையத்தளத்தில் உள்வாங்கப்படுவதற்கு முன்னர் முதன்முறையாக மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டும். அந்தப் பரிசோதனையில் சித்தியடையும் பணியாளர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் உள்ளிடப்படும்.

 

இணையத்தளத்தில் விபரங்கள் உள்ளிடப்பட்டு முதலாம் ஆண்டின் இறுதியில் வேலை ஒப்பந்தம் கிடைக்காது தொடர்ந்து காத்திருக்கும் பணியாளர்கள், இதுவரை இரண்டாவது முறையும் மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டியிருந்தது. எனினும், புதிய தீர்மானத்தின்படி இரண்டாம் ஆண்டிற்காக அவ்வாறான மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டிய அவசியமில்லை என்பதுடன், முதன்முறை செய்த மருத்துவப் பரிசோதனை மட்டுமே போதுமானதாகும்.

 

நிர்வாகத் வினைத்திறனை அதிகரிப்பதும், மருத்துவப் பரிசோதனைகளுக்காக வேலை தேடுபவர்கள் செலவிடும் பணத்தைக் குறைப்பதும் இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05