Jan 29, 2026 - 05:31 PM -
0
மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக, போலி முகநூல் (Facebook) பக்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரசாரங்களுக்கு மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இழிவுபடுத்தல்களுக்கு எதிராக, இன்று (29) காலை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பெண் உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினர்:
சமூக மாற்றத்திற்காகப் உழைக்கும் பெண்கள் மீது பாலின அடிப்படையிலான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடுப்பது, அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலாகும். இது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
அரசியல் ரீதியான முரண்பாடுகளைத் தாண்டி, பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல் மற்றும் குணாதிசயங்களைக் குறிவைத்துத் தாக்கப்படுவது பாரிய மனித உரிமை மீறலாகும்.
இவ்வாறான திட்டமிட்ட அவதூறுகள் பெண்களின் தலைமைத்துவத் துணிச்சலைத் தளர்த்துவதுடன், அவர்களைப் பொதுவெளியில் இருந்து மௌனிக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்டவை.
போலி முகநூல் கணக்குகளைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவோரைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகப் பொறுப்புள்ள அதிகாரிகள் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு, நீதி மற்றும் உளநல ஆதரவை அரசு வழங்க வேண்டும்.
பெண்கள் அச்சமின்றித் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தவும், அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்கவும் பாதுகாப்பான சூழலை உருவாக்க ஊடக நிறுவனங்களும் சமூகமும் முன்வர வேண்டும்.
பெண்களின் அரசியல் பங்கேற்பைத் தடுக்கும் இத்தகைய கீழ்த்தரமான செயல்களை நாகரிகமடைந்த சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிவித்த பிரதிநிதிகள், போலி முகநூல் பக்கங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினர்.
--

