Feb 1, 2026 - 07:35 AM -
0
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 (T20) கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
நேற்று (31) திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. ஏற்கனவே தொடரில் 3-1 என முன்னிலை வகித்த இந்திய அணி, இறுதிப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இந்திய அணியின் இளம் வீரர்கள் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணிக்கு 271 என்ற சவாலான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி சார்பில் இளம் அதிரடி துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷான் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, இலக்கை எட்ட முடியாமல் 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இத்தொடர் முழுவதும் சிறப்பாகச் செயற்பட்ட இந்திய இளம் வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். குறிப்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பங்களிப்பு இத்தொடரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய வெற்றியுடன் இந்தியா 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது.

