உலகம்
எப்ஸ்டீன் பட்டியலில் மோடியின் பெயர்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா!

Feb 1, 2026 - 08:06 AM -

0

எப்ஸ்டீன் பட்டியலில் மோடியின் பெயர்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியிடப்பட்ட பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தியோகபூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. 

சமீபத்தில் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இருப்பதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் போலியான பட்டியல் ஒன்று பரப்பப்பட்டது. 

இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளிக்கையில், குறித்த தகவலை முற்றாக மறுத்துள்ளார். 

"சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அந்த அறிக்கையானது போலியானது. பிரதமர் மோடியின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் பொய்யானது. ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் பிரதமரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

பாலியல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகிரங்கப்படுத்தப்பட்டன. இதில் பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டாலும், சில சமூக விரோதிகள் பிரதமர் மோடியின் பெயரைத் திட்டமிட்டு அதில் இணைத்துப் போலியான ஆவணங்களைப் பரப்பியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ