Feb 1, 2026 - 09:57 AM -
0
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் காசா பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 6-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய விமானப்படையினர் காசா நகரில் உள்ள குடியிருப்புக்கள், பொலிஸ் நிலையம் மற்றும் கான் யூனிஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஆகியவற்றைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கான் யூனிஸ் அகதிகள் முகாம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காசா நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
காசா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் பொலிஸார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டதாலேயே, அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காகக் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்படவுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக இந்த எல்லை திறக்கப்படுவது, காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் 10 ஆம் திகதி போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 509 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

