Feb 11, 2026 - 07:10 AM -
0
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவனிமோரி புனித பூமியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித சர்வக்ஞ தாதுக்கள் (புத்தரின் புனித தாதுக்கள்) மீதான பொதுமக்கள் வழிபாடு இன்று (11) காலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
புனித தாதுக்கள் இன்று முற்பகலிலேயே மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவனிமோரி புனித பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புத்த பெருமானின் புனித தாதுக்களின் கண்காட்சி, கடந்த 5 ஆம் திகதி முதல் ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருமளவிலான பக்தர்கள் கடந்த சில நாட்களாகப் புனித தாதுக்களைத் தரிசித்து வழிபட்டனர். நேற்றிரவும் தாதுக்களைத் தரிசிப்பதற்காகப் பெருமளவிலான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இன்று காலை தேவனிமோரி சர்வக்ஞ தாதுக்களுக்குத் விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டதன் பின்னர், காலை 9.45 மணியளவில் வாகனப் பேரணி மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
அதன் பின்னர் விசேட விமானம் மூலம் புனித தாதுக்கள் மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்படும் என ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

