Feb 11, 2026 - 10:09 AM -
0
களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 24 வயதுடைய நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் நேற்று (10) பலாங்கொடை பகுதியில் வைத்துப் பிடிபட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் , கடந்த டிசம்பர் மாதம் நாகொடை வைத்தியசாலைக்குள் வைத்து சிறைக்கைதி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தெஹிவளை பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரைப் படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடனும் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது:
இச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் களுத்துறையிலும், ஒரு பெண் பலாங்கொடையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண்கள் 23 மற்றும் 24 வயதுடைய களுத்துறைவாசிகள் ஆவர். கைது செய்யப்பட்ட பெண் 23 வயதுடைய பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

