Feb 14, 2026 - 09:48 PM -
0
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பானது, மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ஒன்று ஹட்டனில் இன்று (14) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே, இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்கு கல்வி மறுசீரமைப்பு ஒன்று கட்டாயம் அவசியமானதொன்றாகும்.
அந்த வகையில் தற்போது பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு வரவேற்க கூடிய ஒரு விடயமாகும்.
அதில் இருக்கும் தவறு ஒன்றை சுட்டிக்காட்டி, முழுமையான கல்வி மறுசீரமைப்பையும் ஓரங்கட்டுவது ஏற்புடைய விடயம் அல்ல.
அத்துடன் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இந்த கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை முழுமையாக மலையகத்தை சென்றடைய வேண்டும்.
மலையக பாடசாலைகளில் நவீன கருவிகளை வழங்கி கற்றல் நிலைக்கேற்ற வகையில் வளங்களை ஏற்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் அறிமுகமான ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் மலையக பகுதிகளை சென்றடையவில்லை.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
--

