Mar 2, 2026 - 06:02 PM -
0
“என்னால் மூச்சு கூட விட முடியவில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை” எனக் கூறி ‘காதல்’ படத்தில் நடித்த நடிகை மல்லேஸ்வரி வீடியோ வெளியிட்டு உதவி கோரியுள்ளார். உடல்நல பாதிப்பால் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மல்லேஸ்வரி, தமிழில் வெளியான ‘கூலி’, ‘தோட்டா’, ‘அரவான்’, ‘கட்டபொம்மன்’, ‘வில்லாதி வில்லன்’, ‘சோலையம்மா’, ‘பாட்டு வாத்தியார்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40 இற்கும் மேற்பட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மல்லேஸ்வரி.
காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தில் சந்தியாவின் தாயாக நடித்திருந்தார் மல்லேஸ்வரி. தற்போது அவர் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரச வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மல்லேஸ்வரி, தனக்கென யாரும் இல்லாததால், திரைத்துறையினரிடம் சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில், “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள்.
'காதல்' படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன். கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது உடல் நலம் சீராக வேண்டும் எனவும், திரைத்துறையினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

