செய்திகள்
கடும் மழை..! வௌியானது சிவப்பு எச்சரிக்கை!

Nov 25, 2024 - 06:00 PM -

0

கடும் மழை..! வௌியானது சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு   வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இன்று (25) மாலை 04:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (26) மாலை 04:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக  நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

 

இத் தொகுதி இன்று காலை 11.30 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 530 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. 

 

அது எதிர்வரும் 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்த தொகுதியின் தாக்கத்தினால் நாட்டின் வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.

 

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, 

 

பதுளை மாவட்டத்தில் ஹல்தும்முல்ல, எல்ல, பசறை, 

காலி மாவட்டத்தில் பத்தேகம, எல்பிட்டிய,  நாகொட, 

கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, கேகாலை, யட்டியந்தோட்டை , 

மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர ,

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, 

இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே, ஓபநாயக்க, பலாங்கொடை, ரத்னபுர, பலாங்கொடை கஹவத்த  ஆகிய பிரதேச செயலகங்கள் அவதானத்துடன் இருக்குமாறு முதல் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05