Feb 6, 2025 - 10:18 AM -
0
இலங்கை மாநாட்டு தூதர் நிகழ்ச்சித்திட்டத்தை (Sri Lanka Conference Ambassador Programme - SLCAP) ஆரம்பித்து, சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கு விரும்பி நாடப்படுகின்ற ஒரு முன்னணி நாடாக மாறும் தனது பயணத்தில் முக்கியமான சாதனை மைல்கல் ஒன்றினை இன்று இலங்கை நிலைநாட்டியுள்ளது. இந்த வகையில் முதல்முறையாக முன்னெடுக்கப்படுகின்ற இந்த முயற்சியானது சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் (Cinnamon Hotels & Resorts), இலங்கை மாநாட்டு பணியகம் (SLCB) மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுவதுடன், வணிக நிகழ்வுகளுக்கான சர்வதேச மையமாக இலங்கையை உருவாக்குவதற்கு நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை ஒன்றுதிரட்டுகின்றன.
இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பிரதம அதிதியாகவும், சர்வதேச கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் சங்கத்தின் (International Congress and Convention Association - ICCA) பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில் கோபிநாத் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இலங்கை மாநாட்டு தூதர் நிகழ்ச்சித்திட்டமானது உலக அரங்கில் இலங்கையை ஊக்குவிப்பதற்கு உள்நாட்டு அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் தொழில்சார்ந்தவர்கள் தூதர்களாக செயற்படும் வகையில் அவர்களுக்கு வலுவூட்டி, ஈடுபாடுகளை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 தூதர்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு சர்வதேச மாநாடுகளை ஈர்க்கும் வகையில் தத்தமது துறைகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களை இனங்கண்டு, அவர்களின் உதவியையும் SLCAP நாடவுள்ளது. நாட்டில் கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (Meetings, Incentives, Conferences, and Exhibitions - MICE) துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து, நிலைபேற்றியலை ஊக்குவித்து மற்றும் அறிவைப் பரிமாறுவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம்.
SLCAP இன் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல் ஸ்வென்சன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “நிபுணத்துவத்துடன் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முழுமையான பிரயாண அனுபவங்களை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள சுற்றுலா சார்ந்த அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற ரீதியில், இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, மாற்றத்திற்கு வித்திடுகின்ற இந்த முயற்சியை மேற்கொள்வதையிட்டு சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் பெருமை கொள்கின்றது. ஆழமாக வேரூன்றியுள்ள எமது உள்நாட்டு அறிவும், மற்றும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட அணுகுமுறையும் உலகிற்கு இலங்கையின் தனித்துவமான சிறப்பம்சங்களையும், கிடைக்கும் வாய்ப்புக்களையும் காண்பிக்க எமக்கு இடமளித்து, சர்வதேச மாநாடுகளுக்கு விரும்பப்படுகின்ற ஒரு நாடாக இலங்கையை பிரபல்யப்படுத்துகின்றன. City of Dreams Sri Lanka இல் அமைந்துள்ள Cinnamon Life ஆனது ஒரே கூரையின் கீழ் 5,000 பேரைக் கொள்ளக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளதுடன், இப்பிராந்தியத்தில் வணிக நிகழ்வுகளுக்கு விரும்பப்படுகின்ற ஒரு மையமாக எமது நாட்டை நிலைநிறுத்தி, இலங்கையின் MICE தொழிற்துறையை நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம். எமது கூட்டாளர்கள் மற்றும் தூதர்களுடன் ஒன்றிணைந்து, நாட்டின் MICE ஆற்றல்கள் மற்றும் ஈர்ப்பினை வலுப்படுத்தும் வலுவான தளமொன்றை SLCAP தோற்றுவிக்கும்,” என்று குறிப்பிட்டார்.
SLCAP நிகழ்ச்சித்திட்டத்தின் மூலோபாய நோக்கங்களை சுட்டிக்காட்டிய இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நிலையம் ஆகியவற்றின் தலைவர் தீர ஹெட்டியாராச்சி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “உலகளவில் MICE க்கு விரும்பப்படுகின்ற நாடாக இலங்கையை நிலைநிறுத்தும் எமது இலக்கில் ஒரு தைரியமான அடியை SLCAP முன்னெடுத்து வைத்துள்ளது. சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கு முன்வருமாறு உள்நாட்டு அமைப்புக்களின் தலைவர்களை ஊக்குவித்து, தயார்படுத்துவதால் எமது நாட்டுக்கு கணிசமான அளவில் பொருளாதார மற்றும் சமூக ரீதியான நன்மைகளைக் கொண்டு வந்து, தொழிற்துறைகள் மத்தியில் தொடர் நற்பலனைத் தோற்றுவிக்க முடியும்,” என்று குறிப்பிட்டார்.
இத்தேசிய முயற்சியில் கைகோர்த்துள்ளமை குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சார்ட் நட்டால் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மாநாடுகள் மற்றும் அதில் கலந்துகொள்ளும் குழுக்களுக்கு பிரயாண ஆதரவை வழங்கி SLCAP க்கு உதவுவதில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையின் சர்வதேச அடைவுமட்டத்தை வலுப்படுத்துவது மாத்திரமன்றி, இலங்கையின் மிகச் சிறந்த தனித்துவங்களுடன் உலகினை இணைக்கும் எமது குறிக்கோளுடனும் சிறப்பாக ஒன்றியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
தொழிற்துறை நிகழ்வுகளில் பங்குபற்றி, இது குறித்த அறிவைப் பரிமாறி, இந்நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்காலத்தில் தொடர்ந்தும் தக்கவைத்து, வளர்ச்சி காணச் செய்வதற்காக எதிர்கால தூதர்களைப் பிரேரித்து, சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கான விலைமனுக்கோரல்கள் மற்றும் திட்ட முன்மொழிவுகளை தயார்படுத்துவதற்கு உதவி, வணிக நிகழ்வுகளுக்கு விரும்பப்படுகின்ற நாடாக இலங்கையை தீவிரமாக ஊக்குவிப்பதில் SLCAP ன் கீழ் தூதர்களின் பங்களிப்பு அமையும். தொழிற்துறையில் தரஒப்பீட்டுக்கான நியமமொன்றை ஏற்படுத்தி, MICE துறையில், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள், சூழல் மீதான பொறுப்புணர்வு மற்றும் சமூக அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் SLCAP வலியுறுத்துகிறது.
SLCAP போன்ற தொழிற்துறை முயற்சிகள், உள்நாட்டு தொழிற்துறைகள், சுற்றுலாத்துறை மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றுக்குப் பங்களிக்கின்ற வகையில் சர்வதேச மாநாடுகளை ஈர்த்து, கணிசமான அளவில் பொருளாதார நற்பலனைத் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்டவை. எமது நாட்டை வணிக நிகழ்வுகளுக்கு விரும்பப்படுகின்ற, வலுவான மற்றும் ஈர்க்கின்ற ஒன்றாக நிலைநிறுத்தி, சர்வதேச மாநாடுகளின் நோக்கங்களை இலங்கையால் எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை வெளிக்காண்பிப்பதில் இந்நிகழ்ச்சித்திட்டம் கவனம் செலுத்தியுள்ளது.
விருந்தோம்பல் துறையில் முத்திரை பதித்த நிறுவனம் என்ற ரீதியில், இலங்கையில் சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் துறைகளை நேர்த்தியாக்குவதில் சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் அளப்பெரிய பங்காற்றி வருகின்றது. SLCAP ஊடாக, இந்நிகழ்ச்சித்திட்டமானது ஒருமித்த சிந்தனை கொண்ட கூட்டாளர்களுடன் இணைந்து, வணிக நிகழ்வுகளுக்கான உலகத்தரம் வாய்ந்த இடமாக இலங்கையை மேம்படுத்துவதற்கு, விருந்தோம்பல், உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய இலக்கு ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றது.
நிபுணத்துவத்தின் அனுகூலம் மற்றும் தனது உள்நாட்டு தூதர்களின் செல்வாக்கு ஆகியவற்றுடன் இலங்கையின் MICE தொழிற்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த SLCAP தயாராகவுள்ளது. சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள், இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு, தேசத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளை முன்கொண்டு சென்று, சர்வதேச மாநாடுகளுக்கு விரும்பப்படுகின்ற உலகளாவிய முன்னணி நாடாக இலங்கையை நிலைநிறுத்துவதில் பகிரப்பட்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.

