Sep 3, 2025 - 05:39 PM -
0
வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
"சட்டத்தைப் பாதுகாத்தல் - அமைதியைப் போற்றுதல்" என்ற கருப்பொருளில் இன்று (3) இடம்பெறும் 159வது பொலிஸ் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து ஒரு குற்றவியல் கும்பலின் முக்கிய 5 உறுப்பினர்களைக் கைது செய்தமை பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
துப்பாக்கிகளை பறிமுதல் செய்த திட்டத்தின் ஊடாக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டி- 56, கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 1612 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுவரையில் 1416 கிலோகிராம் ஐஸ், 946 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 1282 கிலோகிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை,பொலிஸ் துறையில் 30,000 அதிகாரிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட பலரும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

