Sep 29, 2025 - 10:19 PM -
0
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய அரசியல் பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கரூர் நகர பொலிஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் வைத்து தனிப்படை பொலிஸார் மதியழகனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
