May 24, 2026 - 09:25 PM -
0
தற்போதைய தருணத்திலேனும் நாட்டைப் பொறுப்பேற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் 'சர்வஜன அதிகாரத்தின்' தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விசேட சந்திப்பு, மெல்பர்னில் உள்ள 'Acacia Campus Theatre' மண்டபத்தில் நடைபெற்றது.
'சர்வஜன அதிகாரம்' மற்றும் மெல்பர்ன் சகோதரத்துவம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் மெல்பர்னில் வாழும் பெருமளவிலான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர,
"தற்போது டொலரின் மதிப்பு ஏன் இந்த வேகத்தில் உயர்கிறது என்பது ஒரு குழந்தைக்குக் கூட புரியும்.
இது மத்திய கிழக்கு போரினால் நடந்த ஒன்றல்ல, அதில் சிறிய தாக்கம் இருந்தாலும் கூட. நாம் டொலரில் பணம் செலுத்திவிட்டு, ரூபாவில் வரிகளை அறவிட்டு, அதனை முதன்மைக் கணக்கில் சேர்த்துக்கொள்கிறோம்.
அந்த முதன்மைக் கணக்கில் 1.2 ட்ரில்லியன் ரூபாய் இருப்பதாக நாம் தம்பட்டம் அடிக்கும்போதே, நாம் இஞ்சியைக் கொடுத்துவிட்டே மிளகாயை பெற்றிருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்திருக்க வேண்டும்.
ஒரு மையத்திலான உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் இல்லாத எந்தவொரு அரசியல் இயக்கத்தாலும் ஒரு நாட்டை வெற்றியை நோக்கி முன்னோக்கி நகர்த்த முடியாது.
ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்கலாம், ஆனால் நாட்டிற்கு எந்த நன்மையும் நடக்காது. நாம் மேலும் படுகுழியில் விழுவது மட்டுமே நடக்கும் என்றார்.
கேள்வி: நாட்டின் இந்த வலியைக் குணப்படுத்த நீங்கள் செல்லும் இந்தப் பயணம் தனியாகவா அல்லது குழுவுடனான பயணமா?
தனிப்பட்ட ரீதியில் என்னை மட்டும் பார்க்க வேண்டாம். அதனால்தான், எங்களது அரசியல் இயக்கம் பாரம்பரியமாக ஒரு தலைவரை மையமாகக் கொண்ட அரசியல் இயக்கமாக இல்லாமல் 'சர்வஜன அதிகாரம்' என்ற பெயரில் கூட்டுச் சக்தியாக இருக்கிறது.
எனவே, எங்களது வடிவமே முற்றிலும் மாறுபட்டது. எங்களுடன் இணையும் குழுக்கள் குறித்து நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஆனால், பாரம்பரிய அரசியலோடு கலந்திருந்தாலும், எங்களது புதிய எதிர்பார்ப்புகளுடன் உடன்படக்கூடிய, இறுதியில் வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு வேலைத்திட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். எனவே, அவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டுதான் இந்த எங்களது பயணம் தொடர்கிறது.
கேள்வி: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் இந்த அரசியல் பேச்சுகளில் ஏமாந்து, 159 அல்லது 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெரும்பான்மையை வழங்கி அரசாங்கத்தை அமைத்த பின்னரும், அவர்கள் நம்பிய காரியங்கள் நடக்காதபோது மக்களுக்குப் பெரும் கோபம் வருகிறது. எனவே, உங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்த பிறகு, நீங்கள் கொடுக்கும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறீர்களா? அல்லது இரண்டு மாதங்கள் கடந்த பின்னர், சொன்ன கதைகளை மாற்றிவிட்டு அந்தப் பழைய பாணியிலேயே முன்னோக்கிச் செல்வீர்களா? அப்படி நடந்தால் எனக்கு உங்களுக்கு எதிராகவும் வீடியோக்களை உருவாக்க வேண்டி வரும்.
பதில் - அதற்காகத்தான் நாங்கள் வாக்குறுதி அரசியல் செய்வதில்லை. ஏனென்றால், ஒரு வாக்குறுதியைக் கொடுத்த உடனேயே அது எப்படி நடக்கும் என்று மக்கள் கேட்கிறார்கள்.
இந்த புதிய தலைமுறையினர் நாங்கள் சொன்ன உடனே எதையும் நம்புவதில்லை. அதன் தர்க்கம் என்ன, அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்கிறார்கள்.
அதனால்தான், மிகவும் எளிதான விளம்பர உத்திகள் இருக்கும்போது கூட, தர்க்கரீதியான தொடர்ச்சியைக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக்கொண்டு அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கடினமாக முயற்சித்து வருகிறோம்.
எங்களால் கூட இந்த நேரத்தில் ஒரு பெரிய சேறு பூசும் பிரச்சாரத்தை மட்டும் செய்து, கணிசமான மக்கள் ஆதரவைப் பெற முடியும். ஆனால் பொய் சொல்லி வாக்குகளைப் பெற்று, அந்தப் பதவிக்குச் சென்று கஷ்டமான ஒரு வேலையைச் செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. நாங்கள் உங்களைப் போன்றே ஒரு மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கவே இருக்கிறோம். அப்படிப் பொய் சொன்னால் அது மகிழ்ச்சியான தேசமாக இருக்காது.
கேள்வி: ஒருவேளை 2029 ஆம் ஆண்டு வரை காத்திருக்காமல், தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் உங்களுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டால், அதனை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்?
ஒரு வேலைத்திட்டம் இல்லாமல் பணியைப் பொறுப்பேற்கக் கூடாது. ஆனால், இப்போது கொடுத்தால் இப்பொழுதே செய்வோம். இன்று கொடுத்தால் இன்றே செய்து காட்டுவோம். எந்தவொரு சிக்கலான பிரச்சினையின் வேரைத் தேடிச் சென்றால் அது மிகவும் எளிமையானதாக மாறிவிடும்.
தற்போதுள்ள பிரச்சினை இந்த டொலர் மீதான அழுத்தம், அதுவே முதன்மையானது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது பொருளாதாரத்திற்கு வரும் அழுத்தம் இதுதான். இதனை நிர்வகிக்க வேண்டுமானால், முதலில் செய்ய வேண்டியது மக்களுடன் ஒரு உண்மையான, நேர்மையான மற்றும் நம்பிக்கையான உரையாடலைத் தொடங்க வேண்டும்.
ஏனென்றால், இன்று நாட்டில் இல்லாமல் போயிருப்பது தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கைதானே தவிர டொலர் அல்ல. கட்டியெழுப்பப்பட வேண்டிய இந்த நம்பிக்கையை, சில மணித்தியாலங்களுக்குள் உண்மையைப் பேசி மக்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஏற்படுத்த முடியும். அதை விடுத்து, மீண்டும் தம்பட்டம் அடித்தாலோ அல்லது டொலர் இல்லாமல் போனதற்குக் காரணம் வேறு யாரோ என்று கூறினாலோ இதனை ஒருபோதும் மீட்க முடியாது.
அது முதலாவது விஷயம். மற்றொன்று, கடன் கொடுத்தவர்களுக்கு தேவையானவாறு ஒரு வியாபாரத்தை நடத்தினால் - அதாவது வங்கிக்குத் தேவையானபடி நாம் வியாபாரத்தை நடத்துவது போலாகும். ஆனால், நமக்குக் கடன் கொடுத்தவர்கள் நம்மை விடவும் ஒரு நிராசை நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மிடம் இருந்து கடனை வசூலிப்பதில் அவர்களுக்கு உள்ள தேவையை நாம் இன்னும் சாதகமாகப் பயன்படுத்தவில்லை. நான் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரானவன் அல்ல. ஆனால், IMF கொண்டு செல்லும் இந்தத் திட்டத்தினால்தான் நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறுகிறேன்.
அதை எதிர்கொள்ளக்கூடிய வலிமை, ஆளுமை மற்றும் அறிவு இல்லாமையே இன்றைய இந்த நெருக்கடிக்கு மிகப்பெரிய காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

