Dec 27, 2024 - 11:10 AM -
0
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று காணாமல் போன நிலையில் நேற்று (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் இவர்களது சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், 15 வயதுடைய டினுஜன், நந்தராஜ் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் அவரது மகன் சகோதரியின் மகன் ஆகிய மூவரும் சம்பவதினமான கடந்த 25 ஆம் திகதி மாலை நத்தார் பண்டிகையையொட்டி கடலில் நீராடச் சென்ற நிலையில் மச்சான் மார் இருவரும் கடலில் நீராடிய நிலையில் கடல் அலையால் இழுத்து செல்லப்படதையடுத்து அவர்களை காப்பாற்ற கடலில் குதித்த நந்தராஜ் கடல் அலையில் இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளனர்.
இதனை தொடர்ந்து காணாமல் போனவர்களை உறவினர்கள் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரை பகுதியில் நேற்று காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது.
இதனையடுத்து சில மணி நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்களை மீட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--