Jun 23, 2025 - 08:02 AM -
0
ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவு பொருளாதார தற்கொலைக்கு சமம். இது மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் பாதிக்கும். சீன அரசாங்கம் இது குறித்து ஈரானிடம் பேசவேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் எண்ணெய் தேவைக்காக ஹார்முஸ் நீரிணையை பெரிதும் நம்பியுள்ளனர்" என்று தெரிவித்தார்.