Aug 1, 2025 - 05:23 PM -
0
நீண்ட இடைவௌிக்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வௌியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜூ மேனன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
இந்தநிலையில், படம் தொடர்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது: சினிமா என்பது 100 சதவிகிதம் பொழுதுபோக்கு விடயமாகும். இப்போதல்லாம் சினிமாவில் யாரும் அட்வைஸ் பண்ணுவதை எவரும் விரும்புவதில்லை.
செல்போனில் அட்வைஸ் கொட்டுகிறது. அதை செய், இதை செய்யாதே என்று சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அதுதான் நமக்கு தெரியுமே இதை ஏன் சினிமாவில் சொல்கிறார்கள் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனாலும் சினிமாவில் தப்பான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
பொழுதுபோக்கை சினிமாவில் எவ்வளவு அழகாக சொல்ல வேண்டும், அதனை ஆழமாக சொல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
வெறும் அறிவுரை மட்டும் சொன்னால், ஆடியன்ஸ் தியேட்டரை விட்டு வெளியே சென்று விடுவார்கள்.
நம்ம ஊர்ல பிரசாதம்கூட இனிப்பா இருந்தாதான் சாப்பிடுவாங்க. சிவகார்த்திகேயன் எந்த பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து சினிமாவில் முன்னேறியவர்.
இப்போது அவரை வைத்து நான் இயக்கி உள்ள மதராஸி, கஜினி மாதிரியான திரைக்கதையும், துப்பாக்கி மாதிரியான ஆக்ஷனும் கொண்டதாக இருக்கும் என நம்புவதாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.