செய்திகள்
சுரேஷ் சலே கைதானது எப்படி?

Feb 25, 2026 - 09:34 PM -

0

சுரேஷ் சலே கைதானது எப்படி?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்டார். 

அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மிலேச்சத்தனமான தீவிரவாதிகள் குழுவினால் நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட 10 தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர். 

இச்சம்பவம் குறித்து பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அனைத்து விசாரணைகளின் அடிப்படையில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, தாக்குதல் நடத்திய குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. 

இத்தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாகப் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. 

இதன் ஒரு கட்டமாக, ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றதாகப் பிரித்தானியாவின் 'சனல் 4' ஊடகம் ஒரு ஆவணப்படத்தின் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்தது. 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் ஊடகப் பேச்சாளராக இருந்து, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ரகசிய விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவ்வப்போது கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தது. 

இந்நிலையில், இன்று காலை 8.10 மணியளவில் பேலியகொடை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்று கொண்டிருந்த போதே சுரேஷ் சலே சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன், அவர் பயன்படுத்திய கணினிகள், அவரது வீடு, வங்கிக் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களைச் சோதனையிடவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுரேஷ் சலே முன்கூட்டியே சில தகவல்களைத் தெரிந்திருந்தும், அதனை உரிய தரப்பினருக்குத் தெரிவிக்காமல் மறைத்தாரா என்பது குறித்தும் விசாரணை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். 

இதேவேளை, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் சில முக்கிய நபர்கள் குறித்தும் சி.ஐ.டி விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05