Mar 13, 2026 - 07:37 PM -
0
வைத்தியர்கள் மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பின் தரவுகளைக் கொண்டுள்ள சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் எவரேனும் ஊடுருவியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
தற்போது சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில், விசேட வைத்தியர்களுக்குரிய சேவை யாப்பு ஒன்றினை நிறுவுவது தொடர்பிலான கடிதம் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பார்வைக்கு அரச நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணம் போன்று இது தென்படவில்லை எனவும், தலைப்பு, திகதி, அனுப்பப்பட்ட தரப்பு அல்லது தரப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகிய எந்தவொரு அடிப்படைத் தகவல்களும் இன்றி தயாரிக்கப்பட்ட ஒரு முறைசாரா ஆவணமாகவே இது காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அவதானித்துள்ளது.
இதன் காரணமாக, சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள இந்தக் கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் உத்தியோகபூர்வத் தன்மை குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்காக, குறித்த ஆவணத்தில் அழைப்பாளராகக் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொள்ளப் பலமுறை முயற்சித்த போதிலும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"இதற்கு முன்னரும் சுகாதார அமைச்சின் தரவுக் கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத ஊடுருவல்கள் ஏற்பட்டதால் ஏற்பட்ட பல சிக்கல்கள் குறித்து நாங்கள் அறிவோம். எனவே, இவ்வாறு பொறுப்பற்ற முறையிலும் முறைசாராத விதத்திலும் ஆவணங்கள் பதிவேற்றப்படுவது, அரசாங்கத்தையும் சுகாதார அமைச்சையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக இருக்கக்கூடும் என்பதால், இது குறித்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
