Mar 14, 2026 - 10:01 PM -
0
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தாலும் ஏனைய நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தமது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அரநாயக்க பிரதேச செயலகத்தின் களஞ்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை மேலதிக மாவட்ட செயலாளர் திலித் நிஷாந்தவுக்கு கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத்தின் மேற்பார்வையில் மாவட்ட செயலக விசாரணை அதிகாரிகள் மற்றும் அரநாயக்க பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த உத்தியோகத்தர்களின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதியை மதிப்பிடும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
