Mar 24, 2026 - 06:31 AM -
0
ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அதே ரெயில் நிலையம் இருக்கும் மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய நாட்டின் பிரதமராக மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாராட்டும் அளவுக்கு செயல்படுபவராகிறார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தில்தான் முடியும்.
அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை. சிறுவயதில் ஏழ்மை காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்ற நரேந்திர மோடி சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இணைந்து தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார். அவரது பொதுசேவையை பார்த்த பல தலைவர்களின் அன்புக்குரியவராக மாறினார்.
இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி, கட்சி பணி என்று ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். அவருடைய பணிகளின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. படிப்படியாக உயர்ந்து தேசிய பொதுச்செயலாளர் ஆனார்.
2001-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இருந்தபோது அவருக்கு டெலிபோனில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் அவரிடம் பேசியவர் வேறு யாரும் இல்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான். என்னை மாலையில் வந்து சந்தியுங்கள் என்று வாஜ்பாய் கூறினார்.
இதனை ஏற்று சந்தித்தபோது குஜராத் சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வாஜ்பாய் அன்பு கட்டளை பிறப்பித்தார். அப்போது நரேந்திர மோடி எம்.எல்.ஏ.வாக கூட இல்லை.
பிரதமரின் கட்டளையை ஏற்று 2001-ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று அதன்பிறகு 2002-ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில்தான் ராஜ்காட்-2 தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவரது அரசியல் பயணம் எங்கும் தடைபட்டதில்லை.
தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி என்றவகையில் பீடு நடைபோட்டார். முதல்-மந்திரியாக 4,612 நாட்கள் அதாவது 13 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பதவியை அலங்கரித்தார்.
இதற்கு பிறகு பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற கட்டிடத்துக்குள் பிரதமராகத்தான் நுழைந்தார்.
இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு கட்சியின் சார்பில் தனிப்பெரும்பான்மையோடு பிரதமர் பொறுப்பையேற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்றால் அது நரேந்திர மோடிதான்.
அடுத்து 2019, 2024 பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வாகை சூடி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். அரசு தலைமை பதவியில் கடந்த 22-ந் திகதியோடு அவர் முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் இருந்து முத்திரை பதித்து 8,931 நாட்கள் ஆகியது.
இதற்கு முன்பு சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி தலைவரான பவன்குமார் சாம்லிங் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து 8,930 நாட்கள் பதவி வகித்ததுதான் சாதனையாக இருந்தது.
இப்போது பிரதமர் நரேந்திர மோடி அந்த சாதனையை முறியடித்து விட்டு, முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறார். வருகிற ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வந்தால் 25 ஆண்டுகள் தொடர்ந்து அரசின் தலைமை பொறுப்புகளில் இருந்த பெரிய சரித்திரத்தை படைக்கப்போகிறார்.
விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைத்து வருவது அவரது சாதனையின் மற்றொரு மைல்கல் ஆகும். மொத்தத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சரித்திரம் படைத்துவிட்டார்.
