Mar 24, 2026 - 10:00 AM -
0
யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் அல்ல என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.
நேற்று (23) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த இலங்கை தேசிய கொடியை இறக்கி கருப்பு கொடி ஏற்றிய காரணத்துக்காக விசாரணைக்கு அந்த மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
அதன் பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக கண்டோம். தேசிய கொடி, தேசிய கீதம் போன்றவை அவமரியாதைக்கு உட்படுத்த முடியாத ஒரு சில விடயங்கள்ல ஒன்று. உங்களுடைய எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கிறதுக்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு ஊடாக உரிமைகள் வழங்கப்பட்டிருக்கிறது.;
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டு கடைசி குடிமகன் வரைக்கும் உரிமைகள் இருக்கின்றது. எங்களுடைய அதிருப்தியையும் எதிர்ப்பையும் அரசு அரசாங்கத்துக்கு தெரிவிப்பதற்கு இந்த நாட்டில் குற்றமாகக் கருதப்பட்ட விடயங்களை நீங்கச் செய்ய முடியாது என்பதை நாங்கள் கூற விரும்புகிறோம்.
இலங்கையில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இருக்குற seat availability அடிப்படையில்தான் தேர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அப்பொழுது சிங்கள மாணவர்கள் யாழில் வந்து கற்பது சிங்கள மயமாக்குவது என்று நீங்கள் சொல்வது மிகத் தவறான கருத்து. இனவாதமான கருத்து. சிங்கள பிரதேசங்களில் இருக்கிற பல்கலைக்கழகளில் கூட பரந்த அளவில் தமிழ் மாணவர்கள் கல்விகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிற மாணவத் தலைவர்கள் அல்லது மாணவ சங்கங்கள் இவ்வாறு பேச ஆரம்பித்தால் இது எவ்வளவு ஆபத்தானது என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.
யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் தெரிவிக்கின்றார், இந்த பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் அல்ல. தமிழர்களின் பல்கலைக்கழகமும் அல்ல. இந்த பல்கலைக்கழகம் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் மக்களுக்கும் உரித்தது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் இல்ல. இந்த முழு நாடும் தமிழர் தாயகம் தான் என தெரிவித்தார்.
--
