Apr 25, 2026 - 09:36 AM -
0
உலகளவில் கையடக்க தொலைபேசி செயலிகளை பதிவிறக்கம் செய்வதிலும், அவற்றை பயன்படுத்துவதிலும் இந்தியா முன்னிலையில் இருப்பதாக 'சென்சார் டவர் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில், கையடக்க தொலைபேசி செயலி பதிவிறக்கத்தில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்கள் கொண்ட கையடக்க தொலைபேசிகளில் 2 ஆயிரத்து 550 கோடி பதிவிறக்கங்களை செய்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் 1,260 கோடி பதிவிறக்கங்கள் மட்டுமே செய்யப்பட்டன.
அதுபோல், தற்போதைய ஆண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியாவில் 620 கோடி பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. பதிவிறக்கம் மூலம் 30 கோடி டொலர் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் அதிகம் ஆகும்.
இதில், விளையாட்டு அல்லாத செயலிகளின் பதிவிறக்கம் மூலம் கிடைத்த தொகை 20 கோடி டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயனர்களின் ரசனை மாறிவருவதை இது உணர்த்துகிறது. நடப்பாண்டின் மொத்த வருவாய் 125 கோடி டொலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய அளவில் பதிவிறக்க வருவாய் அதிகரித்தபோதிலும் உலக அளவில் ஒப்பிட்டால், பதிவிறக்க எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவின் வருவாய் இல்லை. அதிக வருவாய் ஈட்டும் முதல் 20 நாடுகள் பட்டியலில் கூட இந்தியா இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு, இந்தியாவை விட பாதிக்கும் குறைவான பதிவிறக்கங்களை செய்த போதிலும் அமெரிக்காவின் வருவாய் 6 ஆயிரம் கோடி டொலராக இருந்தது. இதற்கு காரணம், இந்தியாவில் பதிவிறக்க கட்டணம் குறைவாக இருப்பதுதான். ஒரு பதிவிறக்கத்துக்கு இந்தியாவுக்கு 0.03 டாலர் கிடைக்கிறது. ஆனால், தென்கிழக்கு ஆசியாவும், லத்தீன் அமெரிக்காவும் 0.20 டொலர் வசூலிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், இந்தியாவின் வருவாய் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கேளிக்கை செயலிகள், குறைந்த நேர வீடியோ செயலிகள் ஆகியவை அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.
அடுத்த இடத்தை ஏ.ஐ. செயலிகள், உணவு மற்றும் உணவு வினியோக சேவை செயலிகள் பிடித்துள்ளன. இந்தியாவில் கூகுள்ஒன், பேஸ்புக், சாட்ஜிபிடி, யூடியூப் போன்ற சர்வதேச செயலிகள் அதிக வருவாய் ஈட்டுகின்றன. உள்நாட்டு செயலிகளில் ஜியோஹாட்ஸ்டார் அதிக வருவாய் ஈட்டுகிறது.
