Apr 26, 2026 - 04:16 PM -
0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றமை, அவர் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையினாலேயே எனத் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய அறுவைச் சிகிச்சை முடிந்து தேறிவரும் நிலையில், அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வீட்டிற்குச் சென்றமை குறித்து கவலையடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன கடந்த 24ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் அறுவைச் சிகிச்சையின் பின்னர் அவரது ஆரோக்கியத்தை மைத்ரி விக்ரமசிங்கவே கவனித்து வருவதாகவும், அவரும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கூட எவரும் அனுமதிக்கப்படாத ஒரு நேரத்தில் வெளியார் வருகை தருவது முன்னாள் ஜனாதிபதியின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் என வஜிர அபேவர்தன அன்று குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியமை தொடர்பில் கூறப்படும் விசாரணை ஒன்றிற்காக வாக்குமூலம் வழங்க, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸில் முன்னிலையாகுமாறு மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு III இன் பொறுப்பதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்திற்குப் பதிலளித்த மைத்ரி விக்ரமசிங்க, தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த வாக்குமூலத்தை கொழும்பு 03, ஐந்தாவது ஒழுங்கையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து பதிவு செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோல், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் மைத்ரி விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்து, வாக்குமூலத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தார்.
இதற்கமைய, குறித்த வாக்குமூலத்தைப் பதிவு செய்ய கடந்த 24ஆம் திகதி வருகை தரவுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு III இன் பொறுப்பதிகாரி 20ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்தார்.
அதன்படி, குறித்த தினத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
