Jul 30, 2026 - 01:02 PM -
0
லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அணிகள் தங்களை பலப்படுத்தும் வகையில் பல வீரர் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இதில் ஜிம்பாப்வேயின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான சிக்கந்தர் ராஸா தம்புள்ள சிக்சர்ஸ் அணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக எல்.பிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ள ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபாரூக்கிக்குப் பதிலாக சிக்கந்தர் ராஸா தம்புள்ள சிக்சர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச மற்றும் லீக் போட்டிகளில் சிறந்த அனுபவம் கொண்ட முன்னணி சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவரான ராஸாவின் வருகை, தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கலம்போ கெப்ஸ் அணியும் தங்கள் அணியில் இரண்டு மாற்றங்களை அறிவித்துள்ளது. காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ள குசல் மெண்டிஸுக்குப் பதிலாக சகலதுறை வீரர் அஷேன் பண்டார அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக எல்.பி.எல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளதால், அவருக்குப் பதிலாக மற்றொரு பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளரான ரிப்பொன் மொண்டோல் கலம்போ கெப்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
மறுபுறத்தில் கெண்டி றோயல்ஸ் அணி, காயத்தால் தொடரிலிருந்து விலகிய விஷேன் ஹலம்பகேவுக்குப் பதிலாக இளம் வீரர் கவிஜ கமகேவை ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னதாக, பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமட் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் இலங்கை வரமாட்டார் என்பதை ஜெப்னா கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியிருந்தது. எனவே, அவருக்குப் பதிலாக பங்காளதேஷ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தவ்ஹீத் ஹிரிடோய் அணியில் பெயரிடப்பட்டு, ஏற்கனவே அணியுடன் இணைந்துள்ளார்.
இது குறித்து ஐ.பி.ஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்து தெரிவிக்கையில், “சிக்கந்தர் ராஸா போன்ற முன்னணி வீரரின் வருகை இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. இந்த வீரர் மாற்றங்கள் அனைத்து அணிகளின் பலத்தை அதிகரிப்பதுடன், எல்.பி.எல் 2026 தொடரின் எஞ்சிய போட்டிகளில் ரசிகர்கள் விறுவிறுப்பான கிரிக்கெட்டை ரசிப்பதை உறுதி செய்யும்.” என்றார்.
இதேவேளை, எல்.பி.எல் தொடர் தீர்மானமிக்க இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்புதிய வீரர் மாற்றங்களுடன் ஐந்து அணிகளும் சம்பியன் பட்டத்தை வெல்ல முழுவீச்சில் தயாராகியுள்ளன.
