Aug 3, 2026 - 10:30 AM
“தேசிய அழைப்பை முன்னெடுத்தல்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற தனது வருடாந்த பொதுக் கூட்டத்தில், இலங்கையின் மருந்துப்பொருட்கள் சுயசார்பை மேம்படுத்துவதற்கும், நம்பகமான மருந்துப்பொருட்கள் உற்பத்தி மையமாக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை இலங்கை மருந்துப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (SLPMA) மீண்டும் உறுதிப்படுத்தியது.
கடந்த ஆண்டு SLPMA ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட “கவனிப்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் இலங்கையினுள் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தேசிய அழைப்பு” என்பதை அடிப்படையாகக் கொண்டு, இம்மாநாடு அமைந்தது. கொள்கை ஆதரவை ஏற்படுத்துதல், முற்போக்கான ஒழுங்குமுறை, தொழிற்துறையின் அர்ப்பணிப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மற்றும் துணைத் துறைகளுக்கான முதலீடு ஆகிய ஐந்து மூலோபாய அரண்களின் கீழ் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதன் மூலம், இத்துறையின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையை நடைமுறைச் செயல்பாடுகளாக மாற்றுவதில் இவ்வருடாந்த பொதுக் கூட்டம் கவனம் செலுத்தியது.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) SLPMA இன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொரிசன் லிமிடெட்டின் நிர்வாகப் பணிப்பாளர் தினேஷ் அத்தபத்து தெரிவிக்கையில், 'நாம் தயாரிக்கும் ஒவ்வொரு தயாரிப்பும் ஒரு உயிரைக் காப்பாற்றும் அல்லது மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதனால், மருந்துப்பொருட்கள் துறை ஒரு தனித்துவமான பொறுப்பைச் சுமக்கிறது. ஒரு தொழிற்துறையாக, இலங்கை மக்களுக்கு பாதுகாப்பான, உயர்தரமான மற்றும் மலிவு விலையிலான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதில் நாம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
உலகளவில் போட்டித்தன்மை மிக்க மருந்துப்பொருட்கள் துறையைக் கட்டியெழுப்புவதற்கு, தெளிவான மற்றும் நிலையான தேசிய கொள்கைக்கட்டமைப்பின் ஆதரவுடன் உற்பத்தித் திறன், தயாரிப்பு மேம்பாடு மற்றும் ஏற்றுமதித் திறன்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடு அவசியமாகிறது. பிராந்திய அளவிலும் கூட, மருந்துப் பொருட்கள் துறைகளை மறுவடிவமைப்பதில் தொழிற்துறைக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான வலிமையான கூட்டாண்மைகள் மிகமுக்கியப் பங்காற்றியுள்ளன. சரியான நீண்டகால தொலைநோக்குப் பார்வை மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன், இலங்கையால் மருந்துப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பெறுமதிமிக்க அந்நியச் செலாவணியைப் பாதுகாத்து ஈட்டவும், உயர் மதிப்புமிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது சிறந்த திறமைகளை நாட்டிலேயே தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்; அத்துடன் நம்பகமான மருந்துப் பொருட்கள் ஏற்றுமதித் துறையாகத் தன்னையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
இலங்கையின் மருந்துப் பொருட்கள் சந்தையின் பெறுமதி சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியைக் கொண்டுள்ள நிலையில், இதில் 40% அரச கொள்முதல் மூலமாகவும், 60% தனியார் துறை மூலமாகவும் பூர்த்தி செய்யப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட மீளக் கொள்முதல் ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்தான அரசாங்கத்தின் கொள்முதல் 5% இலிருந்து சுமார் 30% ஆகக் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. இதன் விளைவாக, நவீன உற்பத்தி உள்கட்டமைப்பை நோக்கிய தனியார் துறையின் முதலீடு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இந்த முன்னேற்றம், உள்ளூர் மருந்து உற்பத்தியின் வலுவான ஆற்றலைப் பிரதிபலித்த போதிலும், தற்போதைய நிலையில் தனியார் துறைத் தேவையில் 5% பங்களிப்பை மட்டுமே உள்ளூர் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்கின்றனர். இலக்கு வைக்கப்பட்ட கொள்கை ஆதரவு மற்றும் தொடர்ச்சியான தொழிற்துறை மேம்பாடு ஆகியவற்றின் மூலம் கையகப்படுத்தப்படக்கூடிய மிகப்பெரிய உள்நாட்டு வாய்ப்பு ஒன்று இதில் காணப்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது.
அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு மேலாக, உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக பல செயற்பாட்டுச் சவால்களையும் கொள்கை ரீதியான நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதில் உத்தரவாதமளிக்கப்பட்ட திரும்பக் கொள்முதல் ஒப்பந்தங்களின் காலாவதியும் அடங்கும். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உற்பத்தித் திறன், தயாரிப்பு மேம்பாடு, சிறந்த ஒழுங்குமுறைச் சிறப்பம்சம் மற்றும் ஏற்றுமதிச் சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீட்டிற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கு தெளிவான, நீண்டகால தேசிய மூலோபாய வரைபடம் தொடர்ந்தும் அத்தியாவசியமான ஒன்றாகவே காணப்படுகிறது. உள்ளூர் மருந்து உற்பத்தியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாய ஊக்கியாக உத்தரவாதமளிக்கப்பட்ட மீளக் கொள்முதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அது ஒரு நிரந்தர வழிமுறை அல்ல என்பதை SLPMA ஏற்றுக்கொள்கிறது. சுய திறன்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் போட்டித்தன்மையை அதிகரிப்பது, தனியார் சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்துவது மற்றும் இலங்கையை ஒரு நம்பகமான மருந்து ஏற்றுமதி நாடாக நிலைநிறுத்துவது இத்தொழிற்துறையின் நீண்டகால இலக்காகும்.
எனினும், இந்த இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ச்சியான மற்றும் பொறுமையான முதலீடு அவசியமாகிறது. ஏனைய பல தொழிற்துறைகளைப் போலன்றி, மருந்தியல் மேம்பாடு என்பது தயாரிப்பு உருவாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றங்கள், சர்வதேச ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் உலகளாவிய அங்கீகாரங்கள் உள்ளிட்ட சிக்கலான நடைமுறைகளைக் கொண்டுள்ளது. வணிக ரீதியான பலன்களை ஈட்டுவதற்கு முன்பாக, இவை அனைத்திற்கும் கணிசமான மூலதன முதலீடு, நிபுணத்துவம் மற்றும் நீண்ட கால அவகாசம் தேவைப்படுகின்றன.
எனவே, உள்ளூர் தொழிற்துறையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அளவு, திறன் மற்றும் போட்டித்தன்மை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் வரை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உத்தரவாதமளிக்கப்பட்ட மீளக் கொள்முதல் திட்டம் போன்ற கவனமாக வடிவமைக்கப்பட்ட இடைக்கால வழிமுறைகளின் ஆதரவுடனான முன்கூட்டியே கணிக்கக்கூடிய தேசிய கொள்கைக் கட்டமைப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், நாட்டின் தேசிய மருந்துத் தேவைகளில் 75 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும், நம்பகமான ஏற்றுமதித் துறைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும், மருந்தாளுநர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களைக் கொண்ட திறமையான மனிதவள கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை ஆற்றல் பெறுவதில் SLPMA இன் நீண்டகால தொலைநோக்குப் பார்வை கவனம் செலுத்துகிறது.
1963 இல் ஸ்தாபிக்கப்பட்ட SLPMA, 25 உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், வரலாற்று ரீதியாக இறக்குமதிகளின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு தொழிற்துறையில் தனது மீண்டெழும் திறனை வெளிப்படுத்தியுள்ளது. கணிசமான சவால்கள் காணப்பட்டபோதிலும், இலங்கையின் சுகாதார அமைப்பிற்கு SLPMA தொடர்ந்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும். அரசாங்க அமைச்சுகள், ஒழுங்குமுறை அதிகாரசபைகள் மற்றும் தொழிற்துறைப் பங்குதாரர்களுடனான தொடர்ச்சியான ஈடுபாட்டின் மூலம், ஒவ்வொரு இலங்கையருக்கும் பாதுகாப்பான, மலிவு விலையிலான மற்றும் உயர்தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதிலும், மருந்தியல் உற்பத்தியில் நாட்டை ஒரு நம்பகமான பிராந்தியத் தலைவராக நிலைநிறுத்துவதிலும் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை SLPMA மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

